Thursday 9 May 2013

புர்க்கா-அறிவுக்கு திரையா?அழகுக்கு திரையா?


அல்லாஹுத் தஆலா நமக்கு வழங்கிய இஸ்லாமிய மார்க்கம் இயற்கை மார்க்கமாகும்.மனிதன் இயற்கையின் பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறான். 

 இன்றைய உலகில் இஸ்லாம் மிகவேகமாக பரவி வருகிறது.எந்தளவென்றால் 21 ம் நூற்றாண்டு இஸ்லாமிய நூற்றாண்டு என்று வரலாற்றாய்வாளர்களால் வர்ணிக்கப்படும் அளவுக்கு பூமி எங்கும் இஸ்லாமிய இஸம் மக்களின் மனங்களை ஆட்கொண்டு வருகிறது.

குறிப்பாக, ஐரோப்பாவில் இஸ்லாம் கண்டுவருகிற மாற்றத்தை கண்டு கிருஸ்துவ உலகம்  கதிகலங்கிப்போய் இருக்கிறது.
அங்கு இஸ்லாத்தை தழுவுவர்களில் 75% பெண்கள்.25% ஆண்கள்.என அங்கு நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகிறது.சமீபகாலங்களில் இஸ்லாம் பெண்களை நோக்கி மிகவேகமாக நகர்த்தப்பட்டு வருகிறது.

லண்டனில் திரும்பிய பக்கமெல்லாம் இஸ்லாமிய காட்சிகள்.புர்காக்களும் பர்தாக்களும் லண்டன் வீதிகளை அழங்கரித்துக்கொண்டிருக்கிறது.ஒரு பெரும் கலாச்சார மாற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இப்போதெல்லாம் அங்கு ஆங்கிலேயர்களையும்,ஆலயங்களையும் பார்ப்பது அரிதாகி வருகிறது.அங்கு இஸ்லாமாகும் பெண்களில் பாதிக்கு மேலே புர்கா அணிகிறார்கள்.முழு இங்கிலாந்திலும் இஸ்லாமியபுரட்சி ஏற்பட்டுவருகிறது.

2011 ம் ஆண்டு இங்லாந்து அரசு மக்கள் தொகை கருத்துக்கணிப்பு நடத்தி, அதன் அறிக்கை வெளியிட்டபோது முழு உலகமும் அதிர்ச்சியில் உறைந்து போனது.காரணம், இஸ்லாம் அந்த மக்களை கடந்த பத்தாண்டுகளில் எந்தளவு தூரம் கவர்ந்துள்ளது என்பதை அவ்வறிக்கை பட்டவர்த்தணமாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

2001 முதல் 2011 வரையுள்ள கடந்த பத்தாண்டுகளில் அங்கு கிருஸ்துவர்களின் எண்ணிக்கை 11% குறைந்துள்ளது.அதாவது 31 மில்லியனாக இருந்த கிருஸ்துவர்கள் 33 மில்லியனாக குறைந்துள்ளனர்.
அதேசமயம், அதே பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 80% அதிகாமாகியுள்ளது.அதாவது 1.5 மில்லியனாக இருந்த முஸ்லிம்கள் 2.7 மில்லியனாக அதிகரித்துள்ளனர்.இதில் மிகுதமானவர்கள் பெண்கள்.

பிரிட்டனில் இரண்டாவது பெரியமதம் என்ற அந்தஸ்தை இஸ்லாம் பெற்றுள்ளது.

ஐரோப்பிய பெண்கள் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட காரணம் என்ன? என்று பல்வேறு ஆய்வுகளை அந்நாடுகள் நடத்தி வருகிறது.பெண்களுக்கு நாம் என்ன குறைவு செய்துவிட்டோம்? 
அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்?அதை இஸ்லாம் எப்படி நிறைவுசெய்தது? போன்ற கேள்விகள் அவர்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. 

உலகில் பெண்களுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுத்தவர்களாக தங்களை எண்ணிக்கொண்டவர்கள் இன்று திகைத்துப்போய் உள்ளனர்.

புதிதாக இஸ்லாத்தை தழுவிய பிரபலமான பெண்கள் என்ன சொல்கிறார்கள்?

இங்கிலாந்தின் முன்னால் அதிபர் டோனிபிளேரின் மனைவியின் தங்கை லோர்யன் பூத் ஒரு டிவி நடிகையான இப்பெண் கடந்த 2010 ல் இஸ்லாத்தை தழுவியபோது ஐரோப்பிய உலகமே அதிர்ச்சியில் உறைந்துபோனது.

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன் என்பதற்கான அப்பெண்ணின் வாக்குமூலம்.இதோ:
ஐரோப்பிய மக்கள் நிம்மதியை தேடி செல்வத்தையும் பணத்தையும் சேமிக்கின்றனர்.ஆனால் உண்மையான மனநிம்மதி அல்லாஹ்வின் ஞாபகத்தில்தான் உள்ளது என்பதை நான் கண்டுகொண்டேன்.என்றும்,எனக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்தவர் சக டிவி நடிகையான கர்சிட்மா பேகர் என்று கூறுகிறார்.
கர்சிட்மா என்ற பெண், தான் இஸ்லாமானது குறித்து சொல்லும்போது-
இஸ்லாம் பெண்களுக்கு மிக உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளது.ஆனால் துரதிஷ்டவசமாக மக்கள் இஸ்லாத்தை தவறாக புரிந்துள்ளனர்.
நான் இஸ்லாமானபோது என்னிடம் அதிகமாக கேட்கப்பட்ட கேள்வி: ஒரு பெண் அடிமை மார்க்கத்தில் இணைந்துவிட்டீகளே என்பது தான்.அவர்களுக்கு நான் இப்படி பதில் சொல்வேன்
உண்மையில் இஸ்லாம் பெண் சுதந்திர மார்க்கம்.இஸ்லாம் பெண்களுகளை இரண்டாம் கட்டமாக நடத்துகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது,காரணம் முஸ்லிம்களின் உயிரிலினும் மேலான இறுதிதூதர் முஹம்மத் ஸல் அவர்கள் தங்களின் ஆரம்பகாலத்தில் கதீஜா என்ற பெண்ணின் கீழ் பணிசெய்திருக்கிறார்கள்.ஒரு பெண்ணின் தலமையில் ஒரு இறைதூதர் வேலை செய்தது இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கும் மரியதையாகும்.

இங்கிலாந்தைச்சார்ந்த  26 வயதான நெகூலாபாட்னீ என்ற ஒரு இளம் பெண் இஸ்லாத்தை தழுவியதற்கான காரணத்தை இப்படி கூறுகிறார்.

நான் ஏன் பிறந்தேன்? என் வாழ்வின் முடிவு என்ன? நான் என்ன செய்ய வேண்டும் போன்ற வாழ்வின் தத்துவக்கேள்விகள் அனைத்துக்கும் இஸ்லாம் மட்டுமே தெளிவான வழிகாட்டுகிறது என்பதை நான் புரிந்துகொண்டபோது- இஸ்லாத்தை ஏற்றேன் என்று கூறுகிறார்.

பிரான்ஸில் உள்ள ஒரு மருத்துமனையில் டாக்டராக பணிபுரியும் ஒரு பெண் தான் இஸ்லாமான காரணத்தை இவ்வாறு கூறுகிறார்.

நான் டாக்டர் பணியை ஒரு பெரும் சேவையாக நினைத்து செய்துவருகிறேன்  என்னுடைய அனுபவத்தில் எத்துனையோ நோயாளிகளுக்கு சிகிச்சை செய்துள்ளேன்.
சிலஆண் நோயாளிகளுக்கு நான் மருத்துவம் செய்யும்போது என்னுடைய பணியின் முக்கியத்துவத்தை விடவும் என் உடலின் அழகே அவர்களை ஈர்த்தது.அது எனக்கு மகவும் சங்கடமாக இருந்தது.அவர்களின் தீய பார்வையிலிருந்து என்னை பாதுகாக்க முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அணிந்துகொண்டுதான் ஹாஸ்பிடலுக்கு வருவேன்.அதை நான் அணிந்தபோது என்னை யாரும் தவறான கண்கொண்டு பார்க்கவில்லை,இது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.அதற்கு பிறகுதான் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றி ஆய்வு செய்ய முற்பட்டேன்.புர்கா என்பது அழகுக்கு திரைதானே தவிர அறிவுக்கும் ஆய்வுக்  கும் திரையில்லை என்பதை புரிந்துகொண்டேன்.எனவே பெண்களின் சுதந்திரம் என்பது அவர்களுக்கு தரப்படவேண்டிய உரிமைகளில் உள்ளது.

உண்மை தான்.

இஸ்லாம் பெண்களின் அறிவுக்கும் சிந்தனைக்கும் எப்போதும் திரையிட்டதில்லை.அதனால் தான் அன்னை ஆயிஷா ரலி அவர்கள் 2000 க்கும் மேல்பட்ட ஹதீஸ்களை அறிவிக்க முடிந்தது.

பெரும் இப்னுஸுபைர் ரலி போன்ற பெரும் ஸஹாபாக்கள் அவர்களிடம் மண்டியிட்டு பாடம் படித்தனர்.

ஹதீஸ்களை அறிவிக்கும் துறையில் மட்டும் 71,000 பெண் அறிவிப்பாளர்கள் உண்டு.இமாம் புகாரி மட்டும் தங்களின் கிதாபில் 31 பெண் அறிவிப்பாளர்கள் ஹதீஸ்களை பதிவுசெய்கிறார்கள்.
இப்னு மாஜாவில் 60,திர்மிதியில் 46,அபூதாவூதில் 75 ,நஸயியில் 65 முஸ்லிமில் 36 என பெண் அறிவிப்பாளர்களின் பட்டியல் நீளம்.

இஸ்லாத்தில் பெண்களின் பங்களிப்பில்லாத எந்த துறையும் இல்லை என்று கூறுமளவுக்கு எங்கும் நீக்கமனநிறைந்துள்ளனர்.

அகபா,ஹிஜ்ரத்,பைஅத்,போர் களங்கள் என அத்துனையிலும் பெண்கள் தங்களின் தியாகத்தை பதிவு செய்துள்ளனர்.

திருக்குர்ஆனை மனனம் செய்ததிலும் அதை பாதுகாத்த்திலும் ஹப்ஸா ரலி அவர்களின் பங்களிப்பு மகத்தானது.

மருத்துவதுறையில் அன்னை பாத்திமா ரலி அவர்களின் சேவை மறக்க முடியாதது.
ஹுதைபிய்யாவில் நெருக்கடியில் இருந்த நபி ஸல் அவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்கிய அன்னை உம்முஸலமா ரலி அவர்களின் அறிவுத் திறனை சமுதாயம் மறந்துவிடவில்லை.


இன்றைய உலகம் பெண் சுதந்திரத்திற்கு ஒரு தவறான வடிவம் தந்திருக்கிறது.ஆடை குறைப்பும்,ஆண்,பெண் கலப்பும்தான் சுதந்திரம் என்றால் அப்படிப்பட்ட சுதந்திரம் எங்களுக்கு வேண்டாம் என்பதே இஸ்லாத்தின் நிலபாடாகும்.
இன்றைய சுதந்திரம் பண்பாட்டு வீழ்ச்சிக்கும் கலாச்சார சீகேட்டிற்கும் வழி வகுக்கிறது.பெண்ணுரிமை பற்றி பேசுகிறவர்கள் பெரும்பாலும் பர்தாவை விமர்சிக்காமல் இருப்பதில்லை.

ஏன் முஸ்லிம் பெண்களின் பர்தாமீது இவ்வளவு வெறுப்புணச்சி?

கிருஸ்துவ கண்ணியாஸ்திரிகள்மீது யாரும் விமர்சனம் செய்வதில்லை,அதுவும் ஒருவகை புர்கா தானே?

கல்லாக இருந்தாலும் கடவுளாக இருந்தாலும் அது பெண்ணாக இருப்பதால் தானே சேலை கட்டுகிறார்கள்.அதை யாரும் விமர்சிப்பதில்லையே?
இந்திரா முதல் பிரதிபா வரை முழுக்க மூடிக்கொண்டுதானெ காட்சி தருகிறார்கள். 
வாள் தேவையுள்ள நேரம்போக மீதநேரம் உறைக்குள் இருப்பதே அதற்கு அழகு!பேனா அது மூடியுடன் இருந்தால் தான் கண்ணியம்.இந்த உண்மையை ஐரோப்பிய பெண்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

ஐரோப்பியாவில் எப்போது பெண்களின் பர்தாவை முன்னிலைபடுத்தி இஸ்லாமிய எதிர்ப்புபிரச்சாரத்தை துவக்கினார்களோ அன்றிலிருந்து இஸ்லாம் அம்மக்களை வெற்றிக்கொள்ள ஆரம்பித்தது.
பெண்களின் சுதந்திரம் பற்றி பொய்யாக கவலைபடிபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.
உலகில் பெண்களுக்கு அதிகம் சுதந்திரம் வழங்கப்பட்ட நாடான அமெரிக்காவில் தான் 40 லட்சம் பெண்கள் சிறையில் இருக்கின்றனர்.    பெண்களுக்கு அதிகமாக சுதந்திரம் வழங்கப்பட்ட நாடான பிரிட்டனில் தான் அதிக விவாகரத்துக்களும்,அதிகமான பெண் தற்கொலைகளும் அரங்கேறுகிறது.

சுதந்திரம் என்ற பெயரில் பெண்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து, ஹோட்டல்களிலும் விளம்பரங்களிலும் காட்சிப்பொருளாகவும் போதை பொருளாகவும் அவர்களை கொண்டுவந்து நிறுத்தியதுதான் மிச்சம்.எனவே பெண்களுக்கான உண்மையான சுதந்திரமும் கண்ணியமும் இஸ்லாத்தில் தான் உள்ளது என்பதை மேற்கத்தியபெண்கள் புரிந்துகொண்டனர்.
இஸ்லாம் பென்ணுக்கு வழங்கும் மரியாதை:

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ 

أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ اللَّـهُ غَفُورًا رَّحِيمًا
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

இஸ்லாம் பெண்களை பாதுகாப்பதற்கான அத்துனை வழிமுறைகளையும் கையாள்கிறது
.
பெண்ணின் பெயரும் கூடமறைக்கப்படவேண்டும்.
திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் பெண்களை பற்றி கூறும்போது அவர்களின் பெயர்களை மறைக்கிறான்.

நபி நூஹ் அலை,மற்றும் நபி லூத் அலை அவர்களின் மனைவிமார்கள் பற்றி கூறும்போது-


ضَرَبَ اللَّـهُ مَثَلًا لِّلَّذِينَ كَفَرُوا امْرَأَتَ نُوحٍ وَامْرَأَتَ لُوطٍ
பிர்அவ்னின் மனைவி பற்றி கூறும்போது-


وَضَرَبَ اللَّـهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ
எகிப்து பேரரசர் அஸீஸின் மனைவி பற்றி கூறும்போது.
وَقَالَ نِسْوَةٌ فِي الْمَدِينَةِ امْرَأَتُ الْعَزِيزِ
அதைப்போலவே நபி ஸல் அவர்களின் மனைவிமார்கள் பற்றி கூறும்போது-
وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَىٰ بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا
திருக்குர்ஆனில் கூறப்பட்ட ஒரே பெண்ணின் பெயர் ஹழ்ரத் மர்யம் அலை அவர்களின் பெயர் மட்டும் தான்.

மர்யம் அலை அவர்களின் பெயர் கூறப்பட என்ன காரணம்?

நபி ஈஸா அலை அவர்களை கிருஸ்துவர்கள் அல்லாஹ்வின் மகன் என்று சொன்னார்கள்.அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் “அவர் அல்லாஹ்வின் மகன் அல்ல,மர்யமின் மகன்: என்று கூறுகிறான்.

ஒரு பெண்ணின் பெயர் மறைக்கப்படவேண்டுமென்ற அடிப்படையில் தான் அரபியர்கள் பெண்களின் பெயர்களை பத்திரிக்கைகளில் வெளியிடும்போது நூருல் ஐன் (கண் ஒளி) என்று போடுவார்கள்.
தமிழகத்தில் திருமண பத்திரிக்கைகளில் நூரே சஷ்மி (அதற்கும் இதே பொருளே) என்று அச்சிடுவார்கள்.

பெண்களின் பாதுகாப்பு கருதியே அவர்களை அவர்களின் இல்லங்களில் இருக்கச்சொல்கிறது


وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ
நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்;


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَمْنَعُوا نِسَاءَكُمْ الْمَسَاجِدَ وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ

பெண்களை பள்ளிக்கு வருவதை தடுக்காதீர்.அதேசமயம் அவர்களின் வீடுகளே அவர்களுக்கு சிறந்ததாகும்.
அறிவிப்பாளர்:இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு-அபூதாவூது:480


عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ
لَوْ أَدْرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسْجِدَ كَمَا مُنِعَهُ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ

நபி ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களின் இன்றையநிலையை பார்த்திருந்தால் பனீ இஸ்ராயீல்கள் தங்களின் பெண்களை பள்ளிக்கு வராமல் தடுத்தது போல  தடுத்திருப்பார்கள் என்று அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பாளர்:அம்ரா பிந்த் அப்துர்ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு
.நூல் :அபூதாவூது:482

ஒரு பெண் தன் கால்களை  பூமியில் கடுமையாக அடித்து நடக்கவேண்டாம் என்று வலியுறுத்துகிறது.


وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ

மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;

போர்களத்தில் தன் ஷஹீதான தன் மகனின் சடலத்தை தேடிக்கொண்டுவந்த ஒரு பெண் தன்னை முழுமையாக மறைத்துக்கொண்டு தேடியபோது அதை கண்ட ஒருவர் இந்த நிலையிலும் புர்காவை பேனுகிறீர்களே என்று ஆச்சரியபட்டபோது-
அப்பெண் மரணித்தது என் மகன் தான்.என் மானம் இல்லை என்றாள்
ஒரு பெண்ணின் குரலும் கூட தேவையின்றி அந்நியர்களிடம் வெளிப்படுத்தக்கூடாது.என்பதை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا

(அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.

فقال رسول الله صلى الله عليه وسلم ما لي رأيتكم أكثرتم من التصفيح من نابه شيء في صلاته فليسبح فإنه إذا سبح التفت إليه وإنما التصفيح للنساء
இமாமுக்கு ஒரு தவறை சுட்டிக்காட்ட ஆணுக்கு தஸ்பீஹ் என்றும் பெண்ணுக்கு தன் ஒருகயை கொண்டு மறுகையில் தட்டி ஒளியெழுப்புவது என்றும் கூறினார்கள்.
இறுதியாக:இஸ்லாம் பெண்ணாதிக்க மார்க்கம் என்றுகூட சொல்ல்லாம்.அந்தளவிற்கு பெண்களின் பாதுகாப்பையும் உரிமையையும் பெற்றுத்தந்துள்ளது.





No comments:

Post a Comment