Thursday 11 July 2013

திருக்குர்ஆன் இறங்கிய மாதம்

யா அல்லாஹ்! ரமலானில் என்னை ஸலாமத்தாக்கி வைப்பாயாக!
யா அல்லாஹ்! ரமலானை என்னிடமிருந்து ஸலாமத்தாக்கி வைப்பாயாக!

ஆரம்பமாக உஸ்மானிகள் பேரவை சார்பாக ரமலான் வாழ்த்துக்களையும் துஆக்களையும் பரிமாரிக்கொள்கிறோம்.

ரமலான் என்றவுடன் நினைவுக்கு வருவது அருள்மறை குர்ஆன் தான். காரணம் ரமலான் திருமறையைக்கொண்டே தன்னை அழங்கரித்
துக்கொள்கிறது.

ரமலானை அல்லாஹுத்ததஆலா அடையாள
ப்படுத்தும்போது-

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. என்று கூறுகிறான்.

எந்த அமலும் அந்தந்த காலத்தின் தேவையை,அவசியத்தை கருதி செய்யப்ப  டவேண்டும்.அப்படி பார்க்கப்போனால் ரமலான் மாதத்தின் அமல்கள் முழுக்க முழுக்க குர்ஆனை மையமாக கொண்டதாகும்.

அதனால் தான் ரமலான் மாதத்தில் நபி ஸல் அவர்களுக்கு ஜிப்ரயீல் அலை அவர்கள் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்.அவ்வாறு நபி ஸல் அவர்கள் ஓத ஜிப்ரயீல் அலை அவர்கள் கேட்பார்கள் எனவும் ஹதீஸ் கிதாபுகளில் காண கிடைக்கிறது.

وكان مالك بن أنس إذا دخل رمضان يفرّ من قراءة الحديث، ومجالسة أهل العلم، ويُقبل على تلاوة القرآن من المصحف، وكان لا يتشاغل إلا بالقرآن، ويعتزل التدريس والفتيا والجلوس للناس، ويقول: "هذا شهر القرآن

இமாம் மாலிக் ரஹ் அவர்கள் ரமலான் மாதம் வந்துவிட்டால் ஹதீஸ் பாடம் மற்றும் இதர மார்க்க கல்வியை விட்டும் ஓய்வு பெற்று முழுக்க முழுக்க திருக்குர்ஆன் மீது கவனம் செலுத்துவார்கள், பாடம் நடத்துவது,பத்வாக்கள் வழங்குவது மக்களுடன் அமர்வது போன்ற அனைத்து காரியங்களை விட்டும் விலகியிருப்பார்கள்.மேலும் இது குர்ஆனின் மாதம் என்று கூறுவார்கள்.

وكان سفيان الثوري إذا دخل رمضان ترك جميع العباد، وترك بعض العبادات، وأقبل على قراءة القرآن.

ரமலான் மாதத்தில் சுப்யான் ஸவ்ரி ரஹ் அவர்கள் அனைத்து வணக்கங்களை விடவும் திருக்குர்ஆன் ஓதுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

وكانت عائشة -رضي الله عنها- تقرأ في المصحف أول النهار في شهر رمضان، فإذا طلعت الشمس نامت.

ரமலான் மாதத்தின் பகலின் ஆரம்ப பகுதியில் அன்னை ஆயிஷா ரலி அவர்  கள் குராஆன் ஓதுவார்கள்.சூரியன் உதயமாகிவிட்டால் சிறிதுநேரம் தூங்குவார்கள்.

இவ்வாறு ஸஹாபாக்களும் ஸாலிஹீன்களும் ரமலான் மாதத்தை அல்குராஆனை ஓதுவதின் மூலம்,அதை கேட்பதின் மூலம் சங்கைப்படுத்துவார்கள் என்று வருகிறது.

அருள்மறை அல்குராஆன் இந்த உம்மத்துக்கு வழங்கப்பட்ட மாபெரும் அற்புதமாகும்.அதை தங்கள் வாழ்வில் கடைபிடித்து வாழும் வரை இஸ்லாமிய உம்மத் இந்த உலகில் கண்ணியமாக வாழும்.

அல்லாஹ் இந்த உம்மத்துக்கு வழங்கிய அல்குர்ஆன் ஒரு அமானிதமாகும். அதைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ ۖ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا

நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்தான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான்.

வானம், பூமி, மலைகள் மறுத்துவிட்டபோதிலும் மனிதன் அதை ஏற்கிறான் என வசனம் கூறுகிறது.ஒருவகையில் மலைகளை விடவும் உறுதியால் மனிதன் உயர்ந்து நிற்கிறான்.
ஒருவேளை இந்த குர்ஆனை மலைகளின் மீது இறக்கினால் என்ன நடக்கும் என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிரான்.

لَوْ أَنزَلْنَا هَـٰذَا الْقُرْآنَ عَلَىٰ جَبَلٍ لَّرَأَيْتَهُ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللَّـهِ

(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோ
மானால்,அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர் என்று கூறுகிறான்.

திருக்குராஆன் இறக்கப்பட்ட நோக்கத்தை இந்த உம்மத் சரியாக புரிந்துகொள்ளவில்லையோ என சந்தேகிக்கும் நிலையில்தான் உள்ளது.

திருக்குர்ஆன் மீது நமக்கு இருக்கும் கடமைகள் நான்கு.
அந்த நான்கை சரியாக நிறைவேற்றாதவரை அந்த அமானிதத்தை பாதுகாத்தவர்களாக நாம் ஆக முடியாது.  

முதலாவது:         تلاوةஓதுதல்.

அல்லாஹ்வின் வேதத்தை ஓதுவது முதல் கடமையாகும்.

அல்லாஹ்வின் வேதமான அல் குராஆன் இரண்டு வழிமுறைகளில் பாதுகாக்கப்
படுகிறது.1.ஓதுவதின் மூலம்.2.எழுத்தின் மூலம்.

அதனால் தான் திருக்குராஅனுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும் குராஆன் மற்றும் கிதாப் இந்த இரண்டு பெயர்கள் நிலைபெற்று விட்டன.

  ஓதுவது ஒரு இபாதத்தாகும்.திருக்குரானை தவிர வேறு எந்த நூலையும் ஓதமுடியாது.அதை படிக்கத்தான் முடியும்.புகாரியை ,முஸ்லிமை படிக்க முடியும்.ஓத முடியாது.ஓதுதல் என்பது குராஅனுக்கு மட்டும் சொந்தமானது.
அப்படிப்பட்ட குராஆனை அது இறக்கப்பட்ட ரமலான் இரவு காலங்களில் தராவீஹ் வழியாக உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஓதுகிறார்கள்.

عن ابن عباس قال كان النبي صلى الله عليه وسلم يصلى في شهر رمضان في غير جماعة بعشرين ركعة والوتر

நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தில் தனியாக  இருபது ரக்கஅத்துகளும்,வித்ரும் தொழுதார்கள்'''  என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்  கூறி இருக்கிறார்கள்
 பைஹகி:பாகம் 2-பக்கம்:496

عن يزيد بن رومان قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضى الله عنه في رمضان بثلاث وعشرين ركعة

ஹஜ்ரத்  உமறுப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீபாவாக இருந்த காலத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்கஅத்துகள் தொழுது கொண்டிருந்தார்கள் என்று யஜீதிப்னு றூமான்(ரலியல்லாஹு அன்ஹு) என்பவர் ரிவாயத்துச் செய்திருக்கிரார்
முஅத்தா.233

عن السائب بن يزيد قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضى الله عنها في شهر رمضان بعشرين ركعة


உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது காலத்தில் ஸஹாபாக்கள் இருபது ரக்அத்துக்கள் தொழுது வந்தார்கள்’ (அறிவிப்பவர்:ஸாயிப் பின் யஸீத், நூல்: பைஹகீ- பாகம் 2-பக்கம்:496


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ الله عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

"مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ".

அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குர்ஆனை பொருத்தவரை அதை ஓதுவது,கேட்பது,பார்ப்பது அனைத்தும் இபாதத்தாகும்.ஆரம்ப காலத்தில் குர்ஆன் ஓதி ஓதியே மக்களுக்கு தஃவா கொடுக்கப்பட்டது.
ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்களின் ஓதுதலை கேட்டு இஸ்லாத்திற்கு வந்தவர்கள் அதிக முண்டு.
குர்ஆனின் மீது நமக்கிருக்கும் இரண்டாவது கடமை அதன் படி அமல் செய்வது.
குர்ஆன் நம் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

كان الصحابة -رضي الله عنهم- لا يتجاوزون عشر آيات حتى يعلموا ما فيهن من العلم والعمل
ஸஹாபாக்கள் பத்து ஆயத்துக்களை ஓதினால் அதை விளங்கி அமல் செய்ய முயற்சி செய்வார்கள்.

وقال ابن مسعود -رضي الله عنه-: والذي نفسي بيده! إن حق تلاوته، أن يحل حلاله، ويحرم حرامه

குர்ஆனை ஓதுவது என்பது அதன் ஹலால் ஹராமை பேணி நடப்பதாகும் என இப்னு மஸூத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மூன்றாவது :திருக்குராஆனின் கருத்துக்களை சிந்தித்து ஆய்வு செய்வதாகும்.

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ ۚ وَلَوْ كَانَ مِنْ عِندِ غَيْرِ اللَّـهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
மாரிஸ் புகைல்,டாக்டர் மில்லர் போன்றவர்கள் திருக்குர்ஆனை சிந்தித்தே இஸ்லாத்தை தழுவினர்.
கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.

இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டுடும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.
ஆனால், என்ன வியப்பு! உலகத்தில் வேற எந்த நூலிலும காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களைக் குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.

நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல. குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரைத் திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்துவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம் கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.

நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்படிருந்தது. மில்லரின் வியப்பைக் கூட்டியது.

குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்னில் ஒரு வசனம் அவரைத் தூக்கி வாரிப் போட்டது.

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள்” (4:82)

என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.

இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவென்றால், சிந்தனைகளில் தவறு இருக்கும். தவறு இல்லை என்பது நரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால் தான் அது முடியவில்லை.

நான்காவது.இந்த திருக்குராஆனை மற்றவர்களுக்கு எத்தி வைப்பதும் கடமையாகும்.
خيركم من تعلم القرأن و علمه
உங்களில் சிறந்தவர் தானும் குர்ஆனை கற்று அதை பிறருக்கும் கற்றுக்கொடுப்பவராவார் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.



No comments:

Post a Comment